பெருமானார் (ஸல்)
அவர்களை பின்பற்றுவது என்பது வெறும் சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் பிரியத்துடன்,
ஆசையுடன், மனப்பூர்வமாக அமைய வேண்டும் என்றால் அவர்களை சரியாக புரிந்து கொள்ளும்
போது தான் அது இயலும்.
ஆம். அவர்களின் பெருமைகளை, அவர்களின் சிறப்புகளை, குணங்களை, பண்புகளை, வழிகாட்டுதல்களை, நாம்
சரிவர உணர்வோமேயானால் அப்பொழுது நாம் அவர்களை பின்பற்றும் பாங்கே தனி ரகமாகத்தான்
அமையும். இந்த வகையில் நபி புகழ் காவியங்கள் மக்கள் மனதில் கண்மணி நாயகம் (ஸல்)
அவர்களின் மாண்பை, மகத்துவத்தை பதியவும் புரியவும் வைக்கிறது. இதில் நமக்கு நன்கு
அறிமுகமான நபிமணி புகழ்பாக்களின் தொகுப்பு தான் சுப்ஹான மவ்லிது.
இந்த அரபி காவியத்தை தமிழகத்தில் பெரும்பாலும் முஸ்லிம்கள்
ரபீவுல் அவ்வல் மாதத்தில் பரவலாக பாடி பரவசமடையும் பெரும் பாக்கியத்தை பெற்றவர்கள்
ஆவார்கள். இது தொண்டு தொட்டு நடந்து வரும் பழக்க வழக்கமாகும்.
மௌலிது மஜ்லிசுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு ( சில
சமயங்களில் ஓதுபவர்களுக்கும் கூட ) ஓதப்படும்
கவிதையின் அர்த்தங்கள் புரிவதில்லை. என்ற போதிலும் நபியுடைய புகழை அவர்கள் மீது
சொல்லப்படும் ஸலவாத்துகளை அதிகம் அதிகம் அதிலே தொகுத்து கொடுக்கப்படுகிற
காரணத்தால் ஒரு மகத்தான கௌரவத்தோடு கண்ணியத்தோடு அண்ணல் பெருமானார் (ஸல்)
அவர்களின் மீது அன்பு காட்டி பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த அரபி கவிதையை
படித்து பரவசம் அடைகிறார்கள். பரக்கத் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அல்லாஹ்
கொடுப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
ஆனால் இஸ்லாமிய நடைமுறைகளிலே சந்தேகங்களை கிளப்பி இஸ்லாம்
என்றாலே நிம்மதி. அமைதி என்பதை சந்தேகம் பதட்டம் என்று யாருமே மன நிம்மதியோடு எந்த
வணக்கமும் செய்து விடக் கூடாது. நிம்மதியான முறையிலே யாரும் முஸ்லிமாக வாழ்ந்து
விடக்கூடாது. என்ற நல்ல எண்ணத்தில் ( ? ) மறைந்திருந்து ஊசலாட்டத்தை போடும் கன்னாஸ் ( என்று
சூரத்துன் நாஸ்.சிலே அல்லாஹ் குறிப்பிடுவது போல் அந்த ) வேலை
செய்ய ஒரு கூட்டம் உருவாகி தொழுகை முதற்கொண்டு எந்த வணக்கமும், கொள்கை விளக்கமும்
திருமறை விளக்கமும் இதில் (எதுவுமே சரியில்லை) என்றும்
கூறிவிட துணிந்து விட்டார்கள்.
ஃபிக்ஹ் கிதாபில் சந்தேகம், தப்பு, ஷிர்க், குப்ரு என்று
இவர்கல் தூவிய விதை பெரும் விருட்சமடைந்து தற்போது இவர்களிலிருந்தே ஒரு கூட்டம்
உருவாகி ஹதீஸே வேண்டாம் என்று கூற துணிந்து விட்டார்கள்.
அவர்களிலே ஒருவர் ஒரு ஹதீஸை இருக்கிறது என்றும், இன்னொருவர்
இல்லையென்றும், ஒருவர் பலமானது என்றும், வேறொருவர் பலஹீனமானது என்றும்
குழப்பியதின் விளைவாக, இப்படி சந்தேகத்துக்கும் சச்சரவுக்கும் இடம்பாடான ஹதீஸை
விட்டு விட்டு சந்தேகமே இல்லாத குர்ஆனை மட்டுமே எடுத்துக் கொண்டால் என்ன..? என்ற
வினாவின் வெளிப்பாடுதான் அஹ்லுல் குர்ஆன் என்று ஒரு கூட்டம் சென்னையில் எட்டிப்
பார்க்க ஆரம்பித்தது.
பின்னர் இவர்கள் ஹதீஸை அதன் அறிவிப்பாளர்கள் ஸாஹாபிகளை அதை
பதிவு செய்து வைத்திருக்கும் ஹதீஸ் கலை வல்லுனர்களான இமாம் புகாரி, முஸ்லிம்,
அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா போன்ற பற்பல வல்லுனர்களை குறைத்துப் பேச
முற்பட்டு விட்டார்கள். ஏன் நபி (ஸல்) அவர்களையே அவர் ஒரு அஞ்சல்காரர் தான்.
தபாலை-குர்ஆனை கொண்டு வந்து சேர்த்ததோடு அவர்கள் பணி முடிந்து விட்டது. இனி
அவர்களோ அவர்களின் ஹதீஸ் விளக்கமோ தேவையில்லை என்று கூறுமளவிற்கு அவர்கள்
போய்விட்டார்கள். இதுமாதிரி குழப்பத்திற்கு வித்திட்ட குழப்பவாதிகளின்
பித்தலாட்டத்தில் ஒன்றான சுப்ஹான மவ்லிதில் ஷிர்க் என்பதைப் பற்றி ஆராய்வோம்.
சுப்ஹான மவ்லிதில் இந்த நவீனவாதிகள் கிளப்பும்
சந்தேகங்களையும் தவறான முறையில் நெளித்தும் வளைத்தும் அவர்கள் கூறும் தப்பான அர்த்தங்களையும்
அது எவ்வளவு அபத்தமானது என்பதையும் நாம் காண்போம்.
سُبْحَانَ مَوْلِدُ
சுப்ஹான - ( குறைவில்லா ) மவ்லிது.
மௌலிதுக்கு ஏன்
ஸுப்ஹான மௌலிது என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நாம் யோசித்ததுண்டா...?
பின்னால் இதில்
குறை கூறும் கூட்டம் ஒன்று கிளம்பும் என்பதனாலோ என்னவோ குறையில்லாத மௌலிது என்று (இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில்) ஒரு நல்லதோர் பெயரை அல்லாஹ் அமைத்துக்
கொடுத்து விட்டான். ஏனென்றால் ஸுப்ஹான என்றாலே குறைவில்லாதது என்று பொருள். அதனால்
தான் அல்லாஹ்வுக்கு மக்கள் இணை ஏற்படுத்துகிறார்கள். குழந்தைகள் இருப்பதாக
கூறுகிறார்கள். என்ற விபரத்தை அல்லாஹ் குர்ஆனில் கூறும் பொழுதெல்லாம் ஸுப்ஹானஹு.
அவன் பரிசுத்தமானவன் எந்த குறையும் அவனில்
இல்லை என்று ஆங்காங்கே கூறுகிறான். எனவே ஸுப்ஹான மௌலிதில் குறை இருக்கிறது என்று
யாராவது சொன்னால் குறையற்ற மௌலிதில் குறை உள்ளது என்று முன்னுக்கு பின் முரணாக
பேசியதாகி விடும்.
ஸுப்ஹான
மௌலிதில் கொள்கைக்கு முரண் இல்லை.
ஸுப்ஹான மௌலிதில்
இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுக்கு முரணானது எதுவும் இல்லை. அல்லாஹ்வையும் ரசூலையும் அவர்களுக்கு
உரிய விதத்தில் புகழ்மாலைகள் அதிலே சாற்றப்பட்டிருக்கிறது. என்பதை தவிர வேறொன்றும்
அதிலே இல்லை. இதை தெளிவுபடுத்துவதே இந்த பேச்சின் நோக்கமாகும்.
நபி புகழ் பாடிய
அந்த நல்ல மகானை அதை எழுதிய ஆஷிகுர் ரசூலை, குப்ரை பரப்புபவர் , ஷிர்க்கை
கூட்டுபவர், பாடக்கூடியவர்களெல்லாம் முஷ்ரிக் என்றெல்லாம் கூறுவது எந்த வகையிலும்
நியாயமில்லை என்பதை தெரிவிப்பதே நமது குறிக்கோளாகும்.
இவர்கள் கூறும்
வீண் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் உண்மையில் இதில் இருக்கிறதா...? என்பதை
பார்ப்போம்.
اَنْتَ شَمْشٌ اَنْتَ بَدْرٌ اَنْتَ نُوْرٌ فَوْقَ نُوْرِ
1. அன்த ஷம்சுன் அன்த பத்ருன்.
யா நபி ஸலாம்
அலைக்கும் என்று துவங்கும் கவியினிடையில் அன்த ஷம்சுன் அன்த பத்ருன் என்று
வருவதைப் பற்றி அதெப்படி நபியை பார்த்து சூரியன் சந்திரன் என்று கூறலாம். அவர்கள்
என்ன சூரியனா... ? மனிதரில்லையா ...? என்று கேட்கிறார்கள்.
பொதுவாகவே ஒப்பு
- உவமானாம் என்பது அரபி இலக்கிய நயமாகும்.
சூரியனைப் போன்ற
நபி என ஒப்பிடுவது தவறு என்று இவர்கள் கூறினால், பிரகாசிக்கும் விளக்காகவும்
وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا
33:46. இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும்
விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)
என்று அல்லாஹ்
கூறுவதையும் தவறு என்றா சொல்லப் போகிறீர்கள். ( நவூதுபில்லாஹ்.) இலக்கிய நயத்தோடு, ரசநையோடு
சிந்திப்பவர்களுக்கு இதன் மகிமை விளங்கும்.
اَنْتَ غَفَّارُ الْخَطَايَا
2.
அன்த கஃப்பாருல் கதாயா.
மௌலிதிலே
இஸ்லாமிய கொள்கைக்கு முரணான விசயம் கூறப்படுகிறது என்று கூறுபவர்களின் பிரதான
குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சில அடிகளை மட்டும் விளக்கி கூறினாலே
அவர்களின் பித்தலாட்டங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
யாநபி ஸலாம்
அலைக்கும் என்று துவங்கும் பைத்தில் அன்த கஃப்பாருல் கதாயா வத்துனூபில்
மூபிகாத்தி.
நீங்கள் பாவங்களை
மிகவும் மன்னிக்க கூடியவர்கள். என்று நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி தன்
மனக் கண் முன் நிறுத்தி அந்த கவிஞர் நபியே நாயகமே, தாங்கள் குற்றங்களை
மன்னிப்பவர்கள், தவறுகளை மன்னிப்பவர்கள், குறைகளை மறைப்பவர்கள் என்று (ஏற்றி) போற்றுகிறார்கள்.
விமர்சிக்கும்
விதம்.
குற்றங்களை
மன்னிக்கும் அதிகாரம் பெற்றவன் அல்லாஹ் மட்டுமே.
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا
أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ
الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ
يَعْلَمُونَ
3:135. தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு
செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக்
கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள்
பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை
மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து
கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
என்று அல்லாஹ்
கூறி இருக்க அல்லாஹ்வுடைய இடத்திலே நபியை வைத்து நீங்கள் பாவங்களை மன்னிக்க
கூடியவர்கள் என்று கூறினால் இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன..? என்று
கேட்கிறார்கள். தொழுகையை விடுதல் பாவம், மது அருந்துதல் பாவம், விபச்சாரம்
திருட்டு கொலை கொள்ளை இவைகளெல்லாம் பாவம். இவைகளை மன்னிப்பதற்கு நபிக்கென்ன உரிமை
இருக்கிறது..? அப்படி நம் மார்க்கம் சொல்லவே இல்லையே என்று ( உண்மை ) அர்த்தத்தை
அனர்த்தமாக்கி இப்படிப்பட்ட ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.
இதன் உண்மை
விபரத்தை கூறுவதற்கு முன் ஒரு பொதுவான விசயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பார்வை மூன்று வகை
1. பிரியத்துடைய
பார்வை.:
உதாரணமாக ஒருவன் நிமிர்ந்து நடக்கிறான் என்றால் அவனை பிரியத்தோடு பார்ப்பவன்
அவன் எப்படி தைரியமாக நிமிர்ந்து செல்கிறான் பார். என்பான். அதே மனிதன் குனிந்து செல்கிறான். முன்பு
பார்த்தவனே இப்பொழுதும் பார்க்கிறான். அப்பொழுது என்ன பணிவு பார், என்று கூறுவான்.
2. விரோதப் பார்வை.: இதே மனிதன்
நிமிர்ந்து போகும் போது வேறொருவனால் பெருமை பிடித்தவன், நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு
போகிறான் பார் என்றும் குனிந்து செல்லும் போது கள்ளப்பயல், திருட்டுப்பயல் தலை
நிமிர்த்த கூட தைரியமிருக்கிறதா பார். என்றும் பேசப்படுகிறான்.
இந்த வேற்றுமையின் காரணம் என்ன..? முன்பு பார்த்தவன் பிரியத்தோடு பார்க்கிறான்.
அவன் நடத்தை நல்லதாக தெரிகிறது. மற்றொருவன் கோபத்தோடு பார்க்கிறான். நடத்தை
அதிருப்தியளிக்கிறது.
3. மூன்றாவது ஒரு
பார்வை இருக்கிறது. அது தான் நீதத்துடைய பார்வை. விருப்பு, வெறுப்பு இல்லாமல்
உள்ளதை உள்ளபடி பார்க்கும் நியாயமான பார்வை. எந்த ஒரு பேச்சை எடுத்துக் கொண்டாலும்
அதில் முன்பு என்ன சொல்லப்படுகிறது, பின்பு என்ன சொல்லப்படுகிறது. சொல்வது யார்..? என்பதையெல்லாம்
கவனித்து முடிவு செய்வது. நீங்கள் பிரிய பார்வை கூட பார்க்க வேண்டாம். நீதப்பார்வை
பாருங்கள்.
ஸுப்ஹான மௌலிதிலும் அப்படி நீதிக் கண் கொண்டவர்களுக்கு அதன்
உண்மை தத்துவம் விளங்கும்.
ஆரம்பத்திலேயே ஸுப்ஹான மௌலிதில் தப்பு இருக்கிறது என்று
முடிவு கட்டிவிட்டவர்கள், நபியை புகழ்ந்தாலே ஆகாது என்ற தன்மை படைத்தவர்களுக்கு
தவறாக தெரியாமல் வேறென்னவாக தெரியும்..? இதன் தெளிவான கருத்து என்னவென்றால் இதற்கு மூன்று விதமாக
விளக்கம் சொல்லலாம்
முதல்
விளக்கம்.
பிரச்சனைக்குரிய அன்த கஃப்பார் என்ற பாடல் வரிகளுக்கு
முன்பு கவிஞர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி பாடி வருகிறார். என்றாலும் அதற்கு
பின்னால் ரப்பி இர்ஹம்னா என்ற பாடல் வரியில் யா அல்லாஹ் எங்களுக்கு கிருபை செய். என
அல்லாஹ்வை அழைத்து கேட்பது வருவதால் இங்கேயும் ( அன்த ) நீ
என்பதற்கு அல்லாஹ்வை முன்னிலை படுத்திக்கூறுவதாக வைத்துக் கொண்டால் எந்த
பிரச்சனையும் வராதே..! ஒரு முஃமின் பாடுகிறார் என்பதை வைத்து
ஏன் இப்படி ஒரு நீதப்பார்வை செலுத்தக்கூடாது.
இரண்டாவது
விளக்கம்.
இன்னும் ஒருபடி கீழே இறங்கி செல்வதென்றால் ( அன்த ) நீ (ர்) என்பதை நபி (ஸல்)
அவர்களுக்கே வைத்துக் கொள்ளலாம். ( அதிலென்ன
தப்பு இருக்கிறது.? )
இந்த வகையில் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ் தான். ஆனாலும்
அல்லாஹ் பாவங்களை மன்னிப்பதற்கு வழிகோலாக அல்லாஹவிடம் மன்றாடி அந்த பாவமன்னிப்பை
பெற்றுத் தருபவராக நபி (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சிபாரிசினால்,
அவர்களின் வழிகாட்டுதலால் தானே நாம் மன்னிப்பு பெற முடிகிறது. எனவே அவர்கள்
மன்னிப்புக்கு காரண கர்த்தாவாக இருக்கிறவர்கள் என்பதால் அவர்களே மன்னிப்பு
அளிப்பதாக (வார்த்தையளவில்) சொல்வது, அவர் கைராசியான டாக்டர், அவரிடம் சென்றால் சுகம்
கிடைக்கிறது என்று சொல்வது போல்.
உண்மையில் சுகம் அளிப்பவன்
அல்லாஹ்வாக இருந்தாலும் அவர் மூலமாக சுகம் கொடுப்பதால் அவரே சுகம்
கொடுப்பது போன்று சித்தரித்து சொல்கிறோமல்லவா...? அதே போல தான்
இங்கும் நீங்கள் மன்னிக்ககூடியவர்கள் என்று ஆளப்பட்டுள்ளது. டாகடரை சுகம் தருபவர்
என்று கூறிவிட்டதால் ஷிர்க் செய்து விட்டான் என்றா கூறுவோம்..? இது மாதிரியான
சொல்லாட்சி அரபி இலக்கியத்தில் இருக்கிறதே..!
அரபி மதரஸாக்களில் சொல்லித் தருவார்கள். ( ஷஃபத் தபீபுல் மரீள ) வைத்தியர் நோயாளிக்கு சுகமளித்தார் என்று ஒரு முஃமின் கூறினால், அல்லாஹ்
சுகமளித்தான் என்று தான் அர்த்தம். வைத்தியர் மூலமாக அல்லாஹ் அளித்ததால் ( அவர் காரணம் என்பதால் ) சுகமளித்தார் என்ற வினைச் சொல்லை வைத்தியரின் பால் இணைத்து கூறப்பட்டுள்ளது.
என்று விளக்கித் தருவார்கள்.
எனவே பாவங்களை மன்னிப்பது அல்லாஹ்வாக இருந்தாலும் நாம்
மன்னிப்பை பெறுவது நபியின் வழியில் தானே. அவர்களின் துஆவினால் தானே. ஆகையினால் நபி
(ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் மன்னிக்கிறான் என்று பொருள் கொள்ளக்கூடாதா..? இப்படி நல்ல
அர்த்தம் கொள்ள வழி இருக்க கள்ள அர்த்தம் ஏன் செய்ய வேண்டும்...?
الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ
أَحْسَنَهُ ۚ أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ ۖ وَأُولَٰئِكَ هُمْ أُولُو
الْأَلْبَابِ
39:18. அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப்
பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.
என்று அல்லாஹ்
நேர்வழி பெற்றவர்களை குறிப்பிடுகிறான்.
ஒவ்வொன்றிலும்
நல்ல அர்த்தம் கள்ள அர்த்தம் இரண்டுமே செய்ய முடியும். பார்வையின் வித்தியாசம்
அது. கள்ளப்பார்வையே ஏன் பார்க்க வேண்டும். நல்ல பார்வை ஏன் பார்க்க கூடாது. குறைந்த பட்சம் ஒரு நபிக் காதலர் பாடுகிறார்
என்பதால் நீதத்துடைய பார்வையாவது போடலாமல்லவா..?
எனவே நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள் அல்லாஹ் மன்னிக்க
வழிகோலாக காரணியாக இருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
ஆக (அன்த்த) நீ என்பதை
அல்லாஹ் என்று வைத்துக் கொண்டாலும் தப்பில்லை. அல்லது நபி தான் என்று வைத்துக்
கொண்டாலும் தப்பில்லை.
மூன்றாவது
விளக்கம்.
இன்னும் நான் கூறுவேன். நபியே மன்னித்தார்கள் என்று
வைத்துக் கொண்டாலும் தப்பில்லை. அதெப்படி மன்னிக்க முடியும் என்று கேட்க முடியாது.
ஏனென்றால் ஒரு முஃமின் நபிக் காதலர் பாடுகிறார் என்பதால் நபி (ஸல்) எந்த பாவங்களை
மன்னித்தார்களோ அப்படிப்பட்ட பாவங்கள் என்று கருத்தில் கொள்ள வேண்டும்.
கல்லால் அடித்த பாவம் - சொல்லால் அடித்த பாவம். 23 ஆண்டுகாலமாக தொல்லை படுத்திக் கொண்டு
இருந்தார்களே அந்த பாவத்தை மன்னித்தார்களே அது மன்னிப்பில்லையா...? நபியை தொல்லை
படுத்தினார்களே அது பாவமில்லையா...? துன்புறுத்தினார்களே அது பாவமல்லவா...? தலையில் குப்பையை கொட்டினார்களே அது பாவமல்லவா...? தாயிப்
நகரத்தில் கல்லால் அடித்தார்களே...அது பாவமல்லவா...? இதையெல்லாம் மன்னித்தது யார்..? ஹிந்தாவை மன்னித்தது யார்...? வஹ்ஷிப்னு
ஹர்பை மன்னித்தது யார்...? அபூஸுப்யானை மன்னித்தது யார்...? மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில்
உங்கள் மீது எந்த கெடுபிடியும் கிடையாது. உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக என பொது
மன்னிப்பு வழங்கியது நபிகளல்லவா...? அப்படி மன்னித்த நபியை நீங்கள் குற்றங்கள்
மன்னித்தவர்கள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்.
நபி மன்னித்தார்கள் என்றால் அவர்களுக்கு செய்த பாவங்களை
மன்னித்தவர்கள் என்று அர்த்தம் கொள்வது தானே நியாயம். நான் மன்னித்து விட்டேன்
என்று சொன்னால் என்ன பொருள்...? எனக்கு செய்த
பாவத்தை மன்னித்து விட்டேன் என்பது தானே. இன்னொருவனுக்கு செய்த தப்பை நான்
மன்னித்து விட்டேன் என்று எப்படி பொருள் கொள்ள முடியும்.
கஃப்பார்
غَفّاَرْ- ஓர் விளக்கம்.
இப்போது வேறொரு விவாதத்தை துவக்கி விடுவர். கஃபர என்றால்
அல்லாஹ் மன்னிப்பதற்கு தான் சொல்லப்படும். அதுவும் கஃப்பார் மிகவும் மன்னிப்பவன்
என்பது அல்லாஹ்வுக்கு மட்டும் கூறுவது தானே பொருத்தமாக இருக்க முடியும். என்று ஒரு
வாதத்தை துவக்கிவிடுவார்கள். இதுவும் உண்மையல்ல.
மஃபிரத்து என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம்.
மனிதனுக்கோ, நபிக்கோ கூறவே கூடாது ( அந்த பதம்
பிரயோகிக்க கூடாது.) என்று
எங்கேயும் கிடையாது.
சொல்லப்போனால் அல்லாஹ்வே குர்ஆனில் தன் அடியார்களைப் பற்றி
وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ
الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ
42:37. அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
என்று கூறுகிறானே.
மஃபிரத்து என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்றால் அல்லாஹ் சொல்வானா..?
மற்றொரு
இடத்தில் ( அவர்களின்
குற்றங்களை )
மன்னித்தும், அவற்றை பொருட்படுத்தாமலும் சகித்துக் கொண்டு இருப்பீர்களாயின் -
நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். ( 65 - 14 )
சரி
பார்க்கவும்
என்ற வசனத்திலும்
அடியார்களின் மன்னிப்பை மஃபிரத்து என்றே குறிக்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூட சொல்லியுள்ளார்கள்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ
" مَنْ لا يَرْحَمْ لا يُرْحَمْ , وَمَنْ لا يَغْفِرْ لا يُغْفَرْ لَهُ
, وَمَنْ لا يَتُبْ لا يُتَبْ عَلَيْهِ "
யார்
மன்னிக்கவில்லையோ அவர் மன்னிக்கப்படவும் மாட்டார். ( முஸ்னத் இமாம் அஹமது 4. 365 )
மஃபிரத்து என்ற
பதம் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று இருந்தால் அல்லாஹ் இப்படி கூறுவானா..? நபி (ஸல்)
அவர்கள் கூறுவார்களா...? என சிந்திக்க வேண்டும்.
எனவே அது
அல்லாஹ்வுடைய மன்னிப்புக்கும் அடியார்களுடைய மன்னிப்புக்கும் பொதுவான ஒரு
வார்த்தையாகும். ஆனால் நாம் மன்னிக்கிறோம் என்ற கருத்தல்ல. அவனுடைய தகுதிக்கு
தக்கவாறு அவன் மன்னிக்கிறான். அடியார்களுடைய தகுதிக்கு தக்கவாறு அவர்கள் மன்னிக்கிறார்கள்.
நாமும் பார்க்கிறோம், கேட்கிறோம். அல்லாஹ்வும் பார்க்கிறான் கேட்கிறான் ஆனால் அவன்,
அவன் தகுதிக்கு தக்கவாறு பார்க்கிறான். கேட்கிறான். நாம் நம் தகுதிக்கு தக்கவாறு
பார்க்கிறோம், கேட்கிறோமல்லவா...? அதுபோல் தான்.
எனவே குர்ஆனில்
உள்ள ஹதீஸில் உள்ள வழிகாட்டுதல்கள் படி மஃபிரத் என்பதை அல்லாஹ்வுக்கு சொல்லலாம்.
அடியார்களுக்கும் சொல்லலாம். என்கிற போது நபி (ஸல்) அவர்களை பார்த்து அந்த கவிஞர்
நீங்கள் அதிகம் அதிகம் மன்னிப்பவர்கள் என்று பாடியதில் என்ன தவறு...?
அவர்
சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். முறையானதைத்தான் சொல்லி இருக்கிறார்.
நேர்மையாகத்தான் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதில் எந்த வகையிலும் ஷிர்க் ( ன் வாடை கூட ) இல்லை என்பதை
தெளிவாக விளங்க வேண்டும்.
وَلَوْ تَكُوْنُ سَقِيْمَا
لَدَيْهِ بُرْءُ السَّقَامِ
3. வலவ் தகூனு ஸகீமா லதய்ஹி புர்வுஸ் ஸகாமி.
இந்த
அடிப்படையில் நீங்கள் நோயாளிகளாக இருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம்
இருக்கிறது என்று பாடுகிறார்கள். இதை தவறாக சித்தரிக்க பின்வருமாறு அடித்தளம்
போடுவார்கள்.
நோயை
கொடுப்பவனும் அல்லாஹ் தான். அதை நீக்குபவனும் அல்லாஹ் தான்.
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
என்று இப்ராஹிம்
அலை அவர்கள் கூறியதாக குர்ஆனே கூறுகிறது. நபியவர்கள், மற்ற நபிமார்கள்
நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நோயினை நீக்கும் ஆற்றலை அல்லாஹ் தான் பெற்றிருந்தான்.
ஆனால் இந்த
மௌலிதை இயற்றியவர் நீங்கள் நோய்வாய்ப்பட்டால் அவரிடம் நிவாரணம் இருக்கிறது என்ற
அடியிலும் மற்றொரு அடியில் வமரீளன் அன்த ஆயிதுஹு கத் அதாஹுல்லாஹு பில்பரஜி.
நபியே நீங்கள்
நோய் விசாரிக்க சென்றவர்களுக்கு அல்லாஹ் சுகம் கொடுத்தான். என்று ஒரு நச்சுக்
கருத்தை கவிஞர் புகுத்துவதாக கூறி, நபியே நோய்வாய்ப்பட்டார்கள். அவர் எங்கிருந்து
நிவாரணம் கொடுப்பார். தங்கள் பேரப்பிள்ளைகளே நோய்வாய்ப்பட்டார்களே..! ஸஹாபாக்களே நோய்வாய்ப்பட்டார்களே...? நபி அவர்களால் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க முடிந்ததா..? எனவே நிவாரணம் நபி கொடுக்கிறார். ( அவர்கள் மூலமாக அல்லாஹ் கொடுக்கிறான்.) என்று கூறுவது அவர்களின் தரத்தை
உயர்த்துவதாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் அவர்களை வைப்பதாகும். எனவே இது ஷிர்க்
தான்.
இப்படியே அவர்கள்
இந்த பாடல் வரிகளைப் பற்றி எழுதுகிறார்கள்.
இதன்படி பார்த்தால்
நபிக்கு யாருக்கும் எந்த சுகமும் அளிக்கும் ரிமை இல்லை. அவர்கள் துஆச் செய்தாலும்
சுகம் கிடைக்க வேண்டும் என்பதில்லை. நபி துஆ செய்தாலும் சுகம் கிடைக்காது.
சிபாரிசு செய்தாலும் சுகம் கிடைக்காது. நம்மைப் போல நபி சாதாரண மனிதர் தான் என்று
அர்த்தமாகிறது. ( இப்படி விளங்கி
கெடுத்தத)ன் விளைவு தான் குர்ஆனே
போதும். அதை கொண்டு வந்து கொடுப்பது தான் நபியின் வேலை. அது முடிந்து விட்டது.
அவர் போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று கூறும் அஹ்லுல் குர்ஆன் கூட்டம்
உருவானது.
குர்ஆன்
தெளிவானது அதை விளக்க வேண்டியதில்லை. நபிக்கு எந்த மகத்துவமும் இல்லை. எந்த
சிறப்பும் இல்லை எனறு கூறியதாலும் புகாரியிலேயே சில ஹதீஸ்களில் குறை இருப்பதாகவும்
மக்களுக்கு தப்பாக விளக்கி வந்த காரணத்தினால் தான். குர்ஆனே புகாரி எதற்கு என்று
உங்களிடம் நேரடியாகவே கேட்கும் உங்களால் வளர்க்கப்பட்ட ஒரு கூட்டம் பிரிந்து
சென்று இருக்கிறது.
இந்த
பாடலின் சரியான பொருள்.
இங்கு என்ன நபி (ஸல்)
அவர்களை அல்லாஹ்வாக ஆக்கி நீங்கள் தான் அல்லாஹ். நீங்கள் தான் நிவாரணம்
அளிக்கிறீர்கள் என்றா கூறினார்கள்...?
நபியே நீங்கள்
நோய் விசாரிக்கச் சென்றால் துஆ செய்வீர்கள். நீங்கள் துஆ செய்த காரணத்தினால்
அல்லாஹ் ஷிபாஃ கொடுக்கிறான்.
قَدْ اَتَاهُ اللهُ بِا لْفَرَجِகத் அதாஹுல்லாஹு பில் ஃபரஜி - அல்லாஹ் சுகம்
கொடுக்கிறான் என்று தானே கூறுகிறார். நபியின் துஆவுக்கும் நோய் விசாரிப்புக்கும்
பவர் இருக்கத்தான் செய்கிறது. என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் நிரம்ப கிடைக்கிறதே.
நபி (ஸல்)
அவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டால் அவரை வியாதி விசாரிக்க செல்வார்கள். "இன்ஷா அல்லாஹ் சுகமாயிடும்." என்று
கூறுவார்கள். அவர் சுகம் பெற்றிடுவார். இதை நாங்கள் பல்வேறு சமயத்தில்
பார்த்திருக்கிறோம் என்று ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.
( நூல் - புகாரி, மிஷ்காத், - பக்கம். 134. )
ஒரு
வரலாறு
ஒருமுறை
மதினாவின் வெளிப்புறத்தில் ஒரு கிராமவாசி நோய்வாய்ப்பட்டார். அவரை நபியவர்கள்
நோய்விசாரிக்கப் போனார்கள். வழமையாக கூறும் வார்த்தையான "கவலைப்படாதீர்கள் இன்ஷா அல்லாஹ் குணமாகி
விடும்." என்று
கூறினார்கள். ( அவர் தனக்கு இருக்கிற அவஸ்தையில் எங்கு குணம்
கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தில் ) "அப்படி குணம் கிடைக்காது நபியே... வயதான என்
மீது வந்திருக்கும் இந்த காய்ச்சல் கபிரில் தான் கொண்டு போய் சேர்க்கும் போல்
தெரிகிறது" என்றார். நபியின் துஆவை பொருட்படுத்தாமல் அவர்
இப்படி கூறியதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியா... அப்படியே இருக்கட்டும் ( ஆகட்டும்) என்றார்கள். அவ்வாறே அவர் கப்ருக்கும் போய்
சேர்ந்தார். ( விபரமில்லாத
பேச்சின் விளைவு இது.) நபியின் பேச்சை
மறுத்துப் பேசினால் கப்ரில் தான் கொண்டு போய் சேர்க்கும்.
நபி (ஸல்)
அவர்கள் தம் தோழர்களிடம் பெயரென்ன...? நல்ல பெயராக இருந்தால் அல்ஹம்து லில்லாஹ் என்று
கூறுவதும், தவறான அர்த்தம் கொண்டதாக இருந்தால் மாற்றி அமைப்பதும் வழக்கம்.
ஒரு சமயம்
ஜனாஸாவில் கலந்து கொள்ள வந்த நபி (ஸல்) அவர்கள் ஒருவரிடம் தங்கள் பெயரென்ன...? என்றார்கள். ஆஸ் என்றார் அவர். இன்னொருவரிடம் அது போல்
கேட்க, ஆஸ் என்றார். மற்றொருவரிடமும் இவ்வாறு கேட்க அவரும் ஆஸ் என்றார். ( ஆஸ் என்றால்
பாவி என்று அர்த்தம். பாவம் செய்வதையே பெருமையாக நினைக்கும் காலம் அது. எனவே
இப்படி பெயர் சூட்டும் பழக்கம் இருந்தது.) அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் அன்தும்
அபீதுல்லாஹ் நீங்களெல்லாம் ( அல்லாஹ்வுக்கு
மறு செய்கிறவர்கள் அல்ல.) அடிபணிகிற
அப்துல்லாஹ்கள் என்றார்கள். மூவருமே அப்துல்லாஹ் என்று தங்கள் பெயரை மாற்றிக்
கொண்டார்கள். இவர்கள் தான் அப்துல்லாஹ் ப்னு உமர் (ரலி) அப்துல்லாஹ் ப்னு அம்ர் (ரலி)
அப்துல்லாஹ் ப்னு ஹாரிஸ் (ரலி) ஆகியோர்கள் ஆவார்கள்.
இம்மூவருக்கும்
ஒரே நேரத்தில் பெயர் மாற்றப்பட்டது. ஜனாஸாவையும்
அடக்கி விட்டு எங்கள் பழைய பெயர்களையும் அடக்கி விட்டு நாங்கள் திரும்பினோம்.
என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இது போல் ஒரு
ஸஹாபியிடம் தங்கள் பெயரென்ன..? என்று
கேட்க ஹஸீன் (கவலையானவர்) என்றார். பெயர்
சரியில்லை. மாற்றிக் கொள் என்று நபி கூற இல்லை என் தாய் தந்தை வைத்த பெயரை
மாற்றுவதாக இல்லை என்றார். நபி (ஸல்) அவர்களும் சரி என்றார்கள்.
வரலாற்றில்
எழுதப்படுகிறது. அவரது ஏழாவது தலைமுறையில் வந்த ஒருவர் என் தாத்தா பெயரை
மாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்களின் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு
கால கட்டத்திலும் கவலையே குடி கொண்டிருக்கிறது என்று கூறிகிறார்.
அப்படியென்றால்
நபியின் சொல்லுக்கு அப்படியொரு பவர் இருந்தது. அல்லாஹ் கொடுத்து வைத்திருந்தான்.
அதை நோயிலிருந்த மனிதன் மறுத்து பேசியதால் கப்ருக்கு செல்ல வேண்டியது வந்தது. எனவே
நபியின் நோய் விசாரிப்பால் ஃஷிபா இல்லையென்றால் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் இப்படி சொல்லியிருப்பார்களா...?
இப்படியிருக்க,
நபியே நீங்கள் யாரை நோய் விசாரித்தீர்களோ அவர்களுக்கு அல்லாஹ் சுகம் கொடுத்தான்.
என்று கவிஞர் கூறுவது தப்பா...?
அந்த டாக்டரிடம்
போனால் சுகம் கிடைக்கிறது என்று சொன்னால்...
ம்... அவருக்கே நோய் இருக்கிறது அவர் எப்படி சுகம் கொடுப்பார் என்றால் இவன்
எப்படி சுகம் பெறுவது...? நபியிடம் ஒரு மகத்துவம் ருக்கத்தான் செய்கிறது.
இதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு யுத்தத்தில்
கத்தாத் ப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு ஆயுதம் தாக்கி ஒரு கண் வெளியே வந்து
விட்டது. நபி (ஸல்) அவர்கள் அவரின் அருகில் வந்து தன் கைகளினால் கண்களை உள்ளே
தள்ளி தடவி விட்டார்கள். ஆச்சரிடம் என்னவென்றால் வெளியே வந்த கண் உள்ளே வைத்து
பொருத்தியவுடன் அது முன்பு போல ஒளி பெற்று விளங்கியது. என்பது மட்டுமல்ல. அது
பாதிக்கப்படாத மற்றொரு கண்ணை விட நன்றாக அழகாக இருந்தது. என்று கூறுகிறது வரலாறு.
நபிக்கே பல்
உடைந்தது. இரத்தம் வந்தது. அவர்கள் எப்படி கண்ணை சுகமாக்கி இருக்க முடியும் என்றா
கேட்பது...?
முஹம்மது ப்னு
முன்கதிர் கூறுகிறார்கள் ஜாபிர் (ரலி) கூறுவதாக : நான்
நோய்வாய்ப்பட்டு மயக்க நிலையில் இருந்தேன். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னிடம்
வந்து ஒழு செய்து அதன் தண்ணீரை என்மீது தெளித்தார்கள். நான் மயக்கம் தெளிந்தேன். ( புகாரி - பாகம் 7. பக்கம் 11. ) நபி (ஸல்) அவர்களால் அவர்களின் சந்திப்பால்
அவர்களின் கரத்தால் சுகம் கிடைக்காது, மடியாது என்றால் புகாரியில் வரும் இந்த
ஹதீஸுக்கு என்ன கூறுவார்களோ....?
இது போன்ற எத்தனை
எத்தனை நிகழ்ச்சிகள்..? சயீப் ப்னு யஜீத் கூறுகிறார்கள். நான் சிறு
பிள்ளையாக இருந்தேன். என்னுடைய சாச்சி என்னை அழைத்துக் கொண்டு நபி (ஸல்)
அவர்களிடம் போய் என் சகோதரியின் மகன் இவர் எப்போதும் நோயாளியாகவே இருக்கிறார் துஆ
செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
சயீப் ப்னு யஜீத்
கூருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தலையை தடவி அல்லாஹ் பரக்கத் செய்வானாக.
என்று துஆ செய்து அதன் பின் ஒழு செய்து அந்த தண்ணீரை எனக்கு குடிக்க
கொடுத்தார்கள்.
நூல் - புகாரி. முஸ்லிம்.
நபியின் மூலம்
இவருக்கு சுகம் கிடைக்கவில்லையா...? ஹதீஸ் கலை வல்லுனர் அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்)
அவர்கள் எழுதுகிறார்கள். நபியவர்கள் சொன்னது போல நடந்தது. அவருக்கு வாழ்க்கையில்
பரக்கத் இருந்தது. நூறு வயதை அடைந்தார். தலையில் நபியின் கை தடவிய பரக்கத்தால்
நூறு வயது வரை ஒரு முடி கூட நரைக்கவில்லை. நபி (ஸல்) தான் ஒழு செய்த தண்ணீரை
குடிக்க கொடுத்ததால் நூறு வயது தாண்டியும் ஒரு பல் கூட விழவில்லை. நபியின்
கரத்தில் சுகமில்லையா...? அவர்களின் துஆவுக்கு பவர் இல்லையா...? அப்படியென்றால் புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ்
கிதாபுகளை பொய்ப்பிக்கிறார்களா...? ஆம்.
மௌலிதில் தவறு என்று சொல்ல வந்தால் இப்படி வந்திருக்கும் ஹதீஸ்களையெல்லாம்
பெய்ப்பிக்க வேண்டியது வரும்.
நபி (ஸல்)
அவர்களின் துஆ பரக்கத்தால் பொருள் வளம் பெற்றவர்கள் உண்டு. இது உண்மை. நபியே
பட்டினி கிடந்தார்கள். அவர் எப்படி பொருள் வளம் கொடுக்க முடியும் என்றா கேட்க
முடியும்...?
அனஸ் (ரலி)
அவர்களின் தாய் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து
நபியே இந்த சிறுவனுக்கு தாங்கள் துஆ செய்யுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள்
கையேந்தி துஆ செய்தார்கள். அந்த பரக்கத்தால் அவர்களுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தன.
நூறு வயதை அடைந்தார். அவரே கூறுகிறார் பேரிச்சம் பழ தோட்டம் அனைவருக்கும் வருடத்திற்கு
ஒரு முறை தான் விளையும். எனக்கு மட்டும் நபியின் துஆ பரக்கத்தால் வருடத்துக்கு
இரண்டு முறை விளைந்தது.
அப்படியென்றால்
நபியால் கொடுக்க முடிந்திருக்கிறது. அல்லாஹ் அப்படியொரு மகத்துவத்தை
வழங்கியிருக்கிறான். அது எப்படி கொடுக்க முடிந்தது.,,? நபி (ஸல்)
அவர்களின் வீட்டிலேயே வறுமை இருந்த்ததே... என்று கேட்டால் அது அதிகப்
பிரசிங்கித்தனமன்றி வேறில்லை.
நபிக்கு அவரின்
துஆவிற்கு மகத்துவம் இருக்கிறது. தன் கரத்தால் பிறருக்கு குணமளிக்கும் அந்தஸ்தை
அல்லாஹ் தான் வழங்கி இருக்கிறான்.
அல்லாஹ்வின்
உதவியினால் பிறவி குருடர்களையும், வெண்குஷ்ட ரோகிகளையும், குணப்படுத்துவேன்.
இறந்தோரை உயிர்ப்பிப்பேன் என்று ஈஸா அலை கூறியதை குர்ஆன்
وَرَسُولًا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ
جِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ
كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ ۖ وَأُبْرِئُ
الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَىٰ بِإِذْنِ اللَّهِ ۖ
وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ ۚ إِنَّ فِي
ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள்
இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;
நான் உங்களுக்காக
களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின்
அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண்
குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு
இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள்
உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு
எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால்
நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
அதை ஊர்ஜிதம்
செய்கிறது.
எனவே நீங்கள்
நோய் விசாரிக்கச் சென்றவர்களுக்கு அல்லாஹ் நிவாரணம் கொடுத்தான் என்று கவிஞர்
பாடுவதில் எந்த தவறும் இல்லை.
اَقْسَمْتُ
فِى نَصْرِي بِكُمْ عَلَيْكُمُ
4. அக்ஸம்து ஃபீ நஸ்ரி பிகும் அலைக்குமு
நபியே நீங்கள்
எனக்கு தவி செய்ய வேண்டுமென்று உங்களின் மீது சத்தியமிட்டு நான் கூறுகிறேன் என்று
கவிஞர் உளறுவதாக கூறுகிறார்கள்.
இதில் அவர்கள்
கண்ட குறை.
1. நபி மீது
சத்தியமிட்டிருக்கிறார். இது கூடாது.
2. நபியின் மிது
சத்தியமிட்டு அவர்களிடமே உதவி கேட்கிறார்.
ஒருவர் நான்
தருகிறேன் என்று சத்தியம் செய்யலாம். ஆனால் உன் மீது சத்தியமாக நீ எனக்கு தா...! என்று சத்தியம்
செய்யலாமா...? கூடாது. இவரும்
அந்த வேலையைத் தான் செய்திருக்கிறார் என்றெல்லாம் கூறுவார்கள்.
இது அநியாயம்.
அதற்கு இந்த அர்த்தமா... என்பது பின்னால் தெரிய வரும். அவர்கள் தவறாக அர்த்தம்
சொல்லி அதை வைத்துக் குற்றச்சாட்டை கூறுகிறார்கள். அவர்களின் அர்த்தம் சரி என்று
ஒப்புக் கொண்டாலும் குற்றச்சாட்டு தவறு ( அரபி சரியாகத்
தெரியாது என்ன செய்வார்கள் பாவம்.)
ஏனெனில் முன்னால்
இருப்பவர் மீதே சத்தியம் செய்து அவரிடமே ஒரு செயலை எதிர்பார்ப்பது கூடாது.
என்கிறார்கள். ஆனால் அது கூடும் என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் உண்டு.
فَقَالَ مَرْوَانُ : أَقْسَمْتُ عَلَيْكَ يَا عَبْدَ
الرَّحْمَنِ لَتَذْهَبَنَّ إِلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ
فلتسألنهما عَنْ ذَلِكَ ، فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ ، وَذَهَبْتُ مَعَهُ حَتَّى
دَخَلْنَا عَلَى عَائِشَةَ ، فسلم عليها ثُمَّ قَالَ : يَا أُمَّ الْمُؤْمِنِينَ
إِنَّا كُنَّا عِنْدَ مَرْوَانَ فَذُكِرَ لَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ ، يَقُولُ :
مَنْ أَصْبَحَ جُنُبًا أَفْطَرَ ذَلِكَ الْيَوْمَ ، قَالَتْ عَائِشَةُ : لَيْسَ
كَمَا قَالَ أَبُو هُرَيْرَةَ : يَا عَبْدَ الرَّحْمَنِ ، أَتَرْغَبُ عَمَّا كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ، قَالَ عَبْدُ
الرَّحْمَنِ : لَا وَاللَّهِ ، قَالَتْ عَائِشَةُ : فَأَشْهَدُ عَلَى رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يُصْبِحُ جُنُبًا مِنَ
جماع غير احْتِلَامٍ ثُمَّ يَصُومُ ذَلِكَ الْيَوْمَ ، قَالَ : ثُمَّ خَرَجْنَا
حَتَّى دَخَلْنَا عَلَى أُمِّ سَلَمَةَ ، فَسَأَلَهَا عَنْ ذَلِكَ ، فَقَالَتْ
مِثْلَ مَا قَالَتْ عَائِشَةُ
1. ஹஸ்ரத்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் குளிப்பு ( கடமையாக ) உள்ள நிலையில் ( பகல் வரும் முன் ) குளிக்காமல் நோன்பு நோற்க்க கூடாது வேறொரு
நாளில் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தகவலை கூறிக் கொண்டிருந்தார்கள்.
அக்கால பேரரசர்
மாவானுப்னுல் ஹிகம் அபூஹுரைரா (ரலி) அவர்களை அழைத்து ( அக்ஸம்து அலைக்க யா அபா அப்திர் (ரஹ்)மான் ல
தஹ்கபன்ன இலா....) அபூ அப்திர் (ரஹ்)மானே...
உன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் நீர் ஆயிஷா உம்மு ஸலமாவிடம் போய் இந்த சட்டத்தை
கேட்டு வர வேண்டும் என்றார்.
இங்கு மர்வான்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் மீதே சத்தியமிட்டு அவர்களிடமே ஆயிஷா உம்மு ஸலமாவிடம்
போகும்படி கேட்டுக் கொண்டார்களே.... மர்வானுக்கு தெரியாத அரபியா... இவர்களுக்கு
தெரிந்து விட்டது...?
அது மர்வான்
சொன்னது தானே. அதெப்படி ஆதாரமாகும் என்று இவர்கள் கேட்கலாம்.
எனவே வாருங்கள்
இன்னொரு ஹதீஸை பார்ப்போம். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது முனாபிகீன்கள் அவதூறு
கூறிய காலம். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தகவல் தெரியாது.
சில நாட்களுக்கு
பின் உம்மு மிஸ்தஹ் மூலம் தகவல் தெரிந்தது. உடனே தன் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து
அழ ஆரம்பித்து விட்டார்கள். வீட்டு பரணில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த அபூபக்ர் (ரலி)
அவர்களுக்கு மகளின் அழுகை சப்தம் கேட்டது. தன் மனைவியை அழைத்து விபரம் கேட்க,
ஆயிஷாவை பற்றி வெளியில் பேசப்பட்ட செய்தியை தெரிந்து கொண்டு, அழுகிறது என்றார்கள்.
உடனே கீழே இறங்கி வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் தானும் கண்ணீர் வடித்துக் கொண்டு " நபியின் வீட்டுக்கு போ என்று உன் மீது
ஆணையிட்டு கூறுகிறேன்." என்றார்கள்.
நூல் -
புகாரி, முஸ்லிம், திர்மிதி.
ஆயிஷா (ரலி)
அவர்களிந் மீது சத்தியமிட்டு அவர்களையே திரும்பி செல்லும்படி கூறினார்களே. நபியின்
மீது சத்தியமிட்டு அவர்களையே தவி செய்யும்படி கேட்பது கிறுக்குத்தனம் என்று
கூறுகிறார்களே. நான் கேட்கிறேன். மர்வான் சொன்னது கிறுக்குத்தனமா..? அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னது
கிறுக்குத்தனமா...? அல்லாஹ் பாதுகாப்பானாக.
விமர்சனம் என்ற
பெயரில் மனதில் வந்த மாதிரியெல்லாம் கூறுவதா...?
ஒரு கருத்தை
சொல்ல ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்றால் வேறொருவரின் கருத்தை விமர்சனம் செய்ய
இரண்டாயிரம் முறை யோசிக்க வேண்டும். ஏன் கொஞ்சம் ஹதீஸை ஆராய்ந்து பேசக்கூடாது...?
மதினாவுக்கு
ஹிஜ்ரத் செய்து வந்த ஸஹாபிகளில் அப்துர் (ரஹ்)மான் ப்னு ஸப்வான் (ரலி) என்ற ஒரு
ஸஹாபி. அப்பாஸ் (ரலி) அவர்களின் நெருங்கிய தோழர். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட
வேளையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கென ஒரு சிறப்பு உண்டு. அந்த சிறப்பு தன் தந்தைக்கு
கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஃபத்ஹ் மக்காவுடைய தினத்தன்று தன் தந்தை ஸப்வானை
நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் வந்து நாயகமே இவருக்கு ஹிஜ்ரத் போவதற்கு பைஅத்
செய்து கொடுங்கள் என்றார்.
ஆனால் ஹிஜ்ரத்
செய்வதற்கு சிறப்பு கிடைப்பதே இஸ்லாம் வலிமை பெறாத கஷ்ட காலத்தில் தான் மக்காவில்
நிம்மதியோடு இருக்க முடியாது என்பதால் ஹிஜ்ரத் செய்தாக வேண்டும் என்றும், அவ்வாறு
செய்தால் முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்றும் சிறப்பித்து கூறப்பட்டு
வந்தது. ஆனால் தற்போது ( மக்கா வெற்றி
கொள்ளப்பட்டதன் மூலம் ) இஸ்லாத்தின்
வலிமையும் அதன் உண்மையும் நிரூபணமாகி விட்டதால் மக்காவில் நிம்மதியாக வாழ
முடியும். என்பதால் ஹிஜ்ரத் தேவையில்லை. செய்ய வேண்டியதில்லை என்பதை நபி (ஸல்)
அவர்கள் விளக்கி கூறினார்கள்.
அவருக்கு அதிக
கவலை ஏற்பட்டு நெருங்கிய நண்பரான அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விபரம்
கூறினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சாச்சா அவர்களுக்கு நபி (ஸல்)
அவர்கள் அதிக மரியாதை அளித்து வந்துள்ளார்கள். பணத்தை மார்கத்திற்காக கொட்டி
கொட்டி கொடுத்தவர்கள். தன்னுடன் பிறந்த சகோதரரான ( நபியின் தந்தை) அப்துல்லாஹ்வுக்கு சமமாக அதற்கும் மேலாக நபி (ஸல்)
அவர்களை மதித்தார்கள்.
விபரம் அறிந்த
அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நபியே...! இதோ அப்துர் (ரஹ்)மான் ப்னு ஸப்வான் இவருக்கும்
எனக்கும் இடையிலான நட்பு உங்களுக்கு தெரியும் என்று கூறி அக்ஸம்து அலைக்க ல து பாயி
அன்னஹு - நீங்கள் பைஅத் செய்து கொடுக்க வேண்டும் என்று நான் உங்கள் மீது
சத்தியமிட்டு கூறுகிறேன் என்றார்கள் அப்பாஸ் (ரலி) அவர்கள்.
நபியின் மீது
சத்தியமிட்டு நபியிடத்திலே பைஅத் செய்யும்படி கேட்டார்களே இது உளறலா...? இதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள்.
அப்பாஸ் தானே
சொன்னார் நபி (ஸல்) அதை ஏற்றுக் கொண்டார்களா...? இப்படி
யாரும் கேட்க முடியாது. ஏனென்றாஸ் அந்த ஹதீஸில் அடுத்து இப்படி வருகிறது.
நபி (ஸல்) தனது
திருக்கரத்தை நீட்ட இப்பொழுது சட்டப்பூர்வமான ஹிஜ்ரத் இல்லையென்றாலும் என் சிறிய
தகப்பனார் செய்த சத்தியத்தை நான் நிறைவு செய்கிறேன். கையை நீட்டுங்கள். என்று
பைஅத் செய்தார்கள்.
ஆக ஒருவரின் மீது
ஆணையிட்டு அவரையே ஒன்றைச் செய்யும்படியாக கூறுவது தாராளமாக கூடும் என்பதை மேல்
சொல்லப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் தெளிவுபடுத்துகின்றன,
இதுவெல்லாம்
அவர்கள் அக்ஸம்து ஃபீ நஸ்ரி பிகும் அலைக்குமு என்ற பைத்துக்கு கற்பிக்கும் தவறான
அர்தத்தை ஏற்றுக் கொண்டு சொன்ன பதில்களாகும்.
ஆனால் உண்மையான
அர்த்தம் ( அக்ஸம்து அலைக்கும் ) நபியே உங்கள் மீது ஆணையிட்டு கூறுகிறேன் ( ஃபீ நஸ் ரீ பிகும்) எனக்கு கிடைத்த உதவியெல்லாம் உங்களின்
பொருட்டால் தான் என்று தான் கூற வருகிறார். ( கவிதை என்பதால் கொஞ்சம் முன் பின் செய்ய
வேண்டியதிருக்கும். சாதாரண வாக்கியம் போன்று இருக்காது.)
இப்படி உணமையான
சரியான அர்தத்தை அனர்த்தமாக்கி தன்னுடைய (தவறான ) அர்த்தப்படி கவிதையை விளக்கி அது ஷிர்க் என்று
சித்தரித்துக் காட்டி பெரும் குழப்பம் விளைவிக்கிறார்கள்.
சரியான
விளக்கத்தோடு பார்க்க வேண்டும். நீதக்கண் கொண்டு பார்க்க வேண்டும். எல்லாம் பார்வையின் வேறுபாடுதான். ஆம் சந்தனத்தை
அரைத்து குழைத்து உருட்டி வைத்தால் கூட தனக்கு தான் இரை என்று ஒரு ஜென்மம் ( கின்ஸீர் ) நினைக்கும். என்ன செய்வது...? அதன்
பார்வை அப்படி.
இதுபோல தான்
தாங்களாகவே தப்பான அர்த்தங்களை கொடுத்து பேர்போன இவர்கள் இந்த ஸுப்ஹான மௌலிதை
இயற்றிய கவிஞரை முஷ்ரிக், காபீர், துரோகி இஸ்லாத்திற்கு விரோதமான கருத்தை சொன்னவர்
என்றும் பல அடைமொழிகளை கொடுத்து, அதோடல்லாமல் இதை ஓதுபவர்களையும் மோசமாகவும்
பேசவும் செய்கிறார்கள். இது நேர்மையான மர்க்கத்துக்கு உகந்த விமர்சனங்கள் அல்ல.
மாறாக அவர்களின் கர்வத்தனத்துக்கும், போக்கிரித்தனத்துக்கும் தான் ஆதாரம் என்பதை
நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதன் அடிப்படையில் அவர்களால்
விமர்சிக்கப்படும் அடிகளில் ஒரு சிலவற்றில் அநியாயமான அவர்களின்
குற்றச்சாட்டுகளையும் தெளிவான நியாயமான அதன் உண்மை விளக்கங்களையும் இங்கு
தந்துள்ளேன்.
இதுபோலத்தான்
அவர்களின் மற்ற எல்லா வகையான போக்குகளும் என்பதை தெரிந்து இவர்களின் மோசமான
வலைகளில் விழுந்து விடாமல் தங்களின் ஈமானையும் இஸ்லாத்தையும் பாதுகாத்து
அல்லாஹ்வுக்கு உகந்த அடியார்களாக அனைத்து ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ்
ஆக்கிடுவானாக. ஆமீன்.
பேராசிரியர் ஸைபுத்தீன் ரஷாதி
( ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி, பெங்களூர்.)
ஆடியோ உரையிலிருந்து எழுத்து வடிவத்தில்
தொகுத்தவர்.
V.S. முஹம்மது யூசுப்
தாவூதி ரஷாதி.
No comments:
Post a Comment